பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இன்ஜினியர் கைது

தானே: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை தொடர்ந்து நம் பாதுகாப்பு படைகளும், உளவு அமைப்புகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் படையினர், தானே மாவட்டம் கல்வா பகுதியைச் சேர்ந்த ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றும் ரவீந்திர வர்மா, 27, என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

சமூக வலைதளத்தில் பெண் பெயரில் பாகிஸ்தான் ஏஜன்ட் ஒருவர் இன்ஜினியர் வர்மாவிடம் பழகி வந்துள்ளார்.

தெற்கு மும்பையில் உள்ள கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு உளவு சொன்னதும், அதற்காக வங்கி கணக்குகள் வாயிலாக, பணம் பெற்றதும் தெரியவந்தது.

Advertisement