இலக்கியத்தில் இருந்து மக்கள் உத்வேகம் பெற வேண்டும்: தேசிய இலக்கிய மாநாட்டில் ஜனாதிபதி பேச்சு

“இலக்கியத்தில் இருந்து மக்கள் உத்வேகம் பெற்று, தங்கள் குறிக்கோளை அடைய முயல வேண்டும்,” என, ஜனாதிபதி திரவுபதி முர்மு வேண்டுகோள் விடுத்தார்.

டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில், சாகித்ய அகாடமியுடன் இணைந்து, 'இலக்கியம் எவ்வளவு மாற்றங்களைக் கண்டுள்ளது' என்ற தலைப்பில், 2 நாள் தேசிய இலக்கிய மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது.

மாநாட்டை துவக்கி வைத்து, ஜனாதிபதி முர்மு பேசியதாவது:

சிறுவயதில் இருந்தே எழுத்தாளர்களின் மீது மரியாதையும், போற்றுதலும் உள்ளது.

இம்மாநாட்டை, ஜனாதிபதி மாளிகையில் நடத்துவது, எனது நீண்டநாள் விருப்பம்.

ஒடியாவின் உத்கல்மணி கோபபந்து தாஸ் கூறியதைப்போல, 'இந்த தேசத்தின் மண்ணில் எப்பகுதியில் இருந்தாலும், புரி ஜகன்னாத் யாத்திரை வளாகத்தில் இருப்பதைப் போல நன்றியுள்ளவளாக இருக்கிறேன்'.

சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தி இலக்கியத்துக்கு இருப்பதற்கு, வான்மீகி ராமாயணத்தின் சீதா ராமர் கதை, ஓர் எடுத்துக்காட்டு. பக்கீர் மோகன் சேனாதிபதி எழுதிய 'ரேவதி' கதை, என் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலக்கியம் காலத்துக்கேற்ப மாற்றமடைந்து வருகிறது. ஆனால், இரக்கம், மன உணர்வுகள் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாதவை. மக்கள் இலக்கியத்தில் இருந்து உத்வேகம் பெற்று, தங்கள் குறிக்கோளை அடைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசுகையில், “இலக்கியம் சமூகத்தின் பிரதிபிம்பம்” என்றார்.

தொடர்ந்து, 'நெஞ்சிலிருந்து நேரடியாக' என்ற தலைப்பிலான கவியரங்கில், ரணஜித் தாஸ், (வங்காளம்), ஷபி ஷாக் (காஷ்மீர்), தமயந்தி பேஷ்ரா (சந்தாலி)ரவிசுப்ரமணியன் (தமிழ்) உட்பட, பல்வேறு மொழிக் கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.

சாகித்ய அகாடமி தலைவர் மாதவ் கவுஷிக் உட்பட அகாடமி நிர்வாகிகள், நாட்டின் பல்வேறு மொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.



--நமது நிருபர்-

Advertisement