'வெள்ளியங்கிரி மலை ஏற இனி அனுமதி கிடையாது'

தொண்டாமுத்தூர் : வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க, பக்தர்களுக்கு இந்தாண்டு வனத்துறை வழங்கியிருந்த அனுமதி, நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்தாண்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த பிப்., 1 முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்தனர். நாள்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசித்து வந்தனர். வழக்கமாக, மே 31ம் தேதி மாலை வரை, பக்தர்கள் மலையேற அனுமதிப்பார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, கடந்த, மே 25ம் தேதி, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றுடன் இந்தாண்டுக்கான வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான அனுமதி காலம் முடிவடைந்தது. இதனால், இனி பக்தர்கள் மலையேற இந்தாண்டு அனுமதியில்லை என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் கூறுகையில், இனி, பக்தர்கள் மலை ஏற அனுமதியில்லை. இந்தாண்டு, பிப்., முதல் மே மாதம் வரை, 2.50 லட்சம் பக்தர்கள் மலையேறியுள்ளனர், என்றார்.

Advertisement