ஒடிசாவின் 'நைனி' சுரங்கத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி

சென்னை: தெலுங்கானாவின் சிங்கரேணி சுரங்கத்துக்கு பதிலாக, ஒடிசாவில் உள்ள, 'நைனி' சுரங்கத்தில் இருந்து தமிழக மின் வாரியத்திற்கு நிலக்கரி கிடைக்க உள்ளது.

திருவள்ளூர், துாத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுத்த, தினமும் சராசரியாக 60,000 டன் நிலக்கரி தேவை.

அதன்படி, ஆண்டுக்கு தேவையான மொத்த நிலக்கரியில், 1.95 கோடி டன், ஒடிசாவில் உள்ள பொதுத் துறையை சேர்ந்த மகாநதி நிறுவனத்தின், 'தால்சர்' சுரங்கத்தில் இருந்தும்; 25 லட்சம் டன் நிலக்கரி, தெலுங்கானா சிங்கரேணி நிறுவனத்தின் சிங்கரேணி சுரங்கத்தில் இருந்து பெறுவதற்கும், மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது, சிங்கரேணிக்கு பதிலாக, ஒடிசாவில் தால்சருக்கு அருகில் உள்ள, 'நைனி' சுரங்கத்தில் இருந்து, மின் வாரியத்திற்கு நிலக்கரி வழங்க, சிங்கரேணி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான எரிபொருள் ஒப்பந்தம், மின் வாரியம்-சிங்கரேணி இடையே அடுத்த வாரம் கையெழுத்தாக உள்ளது.

இந்த புதிய சுரங்கத்தில் இருந்து கிடைக்க உள்ள நிலக்கரியை, திருவள்ளூரில் அமைக்கப்பட்டு உள்ள வட சென்னை - 3, துாத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் உடன்குடி அனல்மின் நிலையங்களில் பயன்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

Advertisement