பெங்களூருவில் நெரிசலை தவிர்க்க ரூ.40,000 கோடியில் சுரங்கப்பாதை

ஓசூர் : பெங்களூருவில், 40,000 கோடி ரூபாய் மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஓசூரில் விமான நிலையத்திற்கு சிக்கல் ஏற்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, 2024 ஜூன் 27ல், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்காக, ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் விமான ஓடுதளத்துடன் உள்ள, 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' நிறுவனம், சூளகிரி அருகே உலகம் ஆகிய இரு இடங்கள் சரியாக இருக்கும் என, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கியுள்ளது.
ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், தமிழகத்தில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்லும் பயணியர் எண்ணிக்கையும், சரக்கு கையாளும் திறனும் குறையும்.
இதனால், பெங்களூரு விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில், தமிழக எல்லையை ஒட்டி புதிய விமான நிலையம் அமைக்க, கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம்மோகன் நாயுடு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக உள்ளார்.
அவர், கிருஷ்ணகிரியை ஒட்டி ஆந்திர எல்லையான, குப்பம் அருகே விமான நிலையம் அமைக்கும் யோசனையில் இருப்பதாகவும் தகவல் வருகிறது.
இப்படி, ஓசூரில் விமான நிலையம் அமைக்க, கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகள் இடையூறாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
நெரிசல் அதிகம்
ஓசூரில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையம், 75 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஓசூரில் இருந்து அங்கு செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது.
அதுவே, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பயணியர் செல்ல வேண்டும் என்றால், இன்னும் பல மணி நேரம் கூடுதலாகும். அந்த அளவிற்கு பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.
ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், பெங்களூரு நகரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, ஓசூர் வளர்ச்சியடைந்து விடும் என, கர்நாடக அரசு கருதுகிறது. அந்த காரணத்திற்காக தான், ஓசூர் விமான நிலையத்திற்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறது.
பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ., துாரத்திற்கு எந்த விமான நிலையமும் வரக்கூடாது என, ஒப்பந்தம் உள்ளது.
அதனால், பெங்களூரு விமான நிலையம், தமிழக அரசுக்கு என்.ஓ.சி., கொடுத்தால் மட்டுமே, ஓசூரில் விமான நிலையம் துவக்க முடியும்.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, மத்திய அரசு கூறினால் வேறு வழியின்றி, பெங்களூரு விமான நிலையம் என்.ஓ.சி., கொடுத்து தான் ஆக வேண்டும்.
நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், கர்நாடகா அரசு பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில், 60 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக, 42,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரின் ஹெப்பால் முதல் சில்க்போர்டு வரை, 16.7 கி.மீ., துாரமும், கே.ஆர்.,புரம் முதல், நாயன்டஹள்ளி வரை, 16 கி.மீ., துாரமும், சுரங்கப்பாதை திட்டத்தை கர்நாடகா மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
முதல்கட்டமாக, ஹெப்பால் முதல் சில்க்போர்டு வரை, 16.7 கி.மீ., துாரத்திற்கு, 17,780 கோடி ரூபாயில் சுரப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மே 22ம் தேதி அம்மாநில அரசு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. ஓசூரில் விமான நிலையத்திற்கு அனுமதி வாங்கி, பூர்வாங்க பணிகளை முடித்து விமான நிலையம் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டுகளாகி விடும். அதற்குள், பெங்களூரு நகரில் சுரங்கப்பாதை திட்டத்தை கொண்டு வர அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஓசூருக்கு விமான நிலையம் வருவதை தடுக்கும் முயற்சியில், கர்நாடக அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையெல்லாம் முறியடித்து, தமிழக அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்க தீவிரம் காட்ட வேண்டும் என்பதே, ஓசூர் தொழில் முனைவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.











மேலும்
-
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பூவிருந்தவல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை; தமிழக அரசு ஒப்புதல்
-
வரலாறு காணாத மழையில் 4 லட்சம் பேர் சிக்கி தவிப்பு: வெள்ளக்காடானது அசாம்
-
மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு