அமராவதி ஆற்றங்கரையில் 'அறம்பெரும்புதுார்' தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிப்பு

உடுமலை : உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், 'அறம்பெரும்புதூர்' என்ற பழங்கால மக்கள் வாழ்விடம், கற்கோடாரி, கற்சிலைகள் என, தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியிலுள்ள அமராவதி ஆற்றின் கரையோரங்களில், மத்திய தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் மூர்த்தீஸ்வரி தலைமையில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்,சிவக்குமார், அருட்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, ராஜாராம் உள்ளிட்டோர் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, கொழுமம் பகுதியை, 1,800 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த குமணன் மன்னன் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, குமணன் துறைக்கும் மாராக்கப்பாறைக்கும் இடையில், 'அறம்பெரும்புதூர்' என்ற பழங்கால மக்கள் வாழ்விடம் மற்றும் அது குறித்த கல்வெட்டு சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் நடுகற்களும், கற்கோடரிகள், கற்சிலைகள் என தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தொல்லியல் அறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:

அமராவதி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள குறிப்பிட்ட இந்த பகுதிக்கு, சம்பக்காடு, கன்னிமார், கோவில் மேடு என பல்வேறு பெயர்கள் இருந்துள்ளன. இங்கு, 'அறம்பெரும்புதூர்' எனும் கல்வெட்டு சிதிலமடைந்து காணப்படுவதோடு, மக்கள் வாழ்ந்ததற்கான சுடு செங்கற்களை கொண்ட கட்டடங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் சான்றுகள் காணப்படுகிறது.

பழங்கால மக்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பல வடிவங்களிலும், சுவாமி சிலைகள் மட்டுமன்றி, பல்வேறு வகையான கற்சிலைகளும் காணப்படுகிறது.

அமராவதி ஆற்றின் கரையோரம் கிடைக்கும் சிற்பங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவும், வித்தியாசமான தோற்றம் உடையதாகவும் காணப்படுகின்றன.

தொல்லியல் துறை முழுமையாக இப்பகுதியில் ஆய்வு செய்தால், ஏராளமான தொல்லியல் சான்றுகளும், பழங்கால மக்கள் வாழ்வியல் குறித்த வரலாற்று செய்திகளும் கிடைக்கும்.

இவ்வாறு, கூறினார்.

Advertisement