சிக்கப்போகும் தம்பிகள் கக்கப்போவது என்ன?

3

சென்னை : ''தி.மு.க., ஆட்சியை அகற்ற, அனைத்து கட்சிகளும் ஓரணியில் சேர வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.



சென்னை, தி.நகர் கமலாலயத்தில், நயினார் நாகேந்திரன் முன்னிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபால் மற்றும், 15 டாக்டர்கள், தமிழக பா.ஜ.,வில் நேற்று
இணைந்தனர்.


பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
மக்கள் விரோத ஆட்சியாக இருக்கும் தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும்; தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். த.வெ.க., எண்ணம் எதுவாக இருந்தாலும், அது, அதுவாகவே இருக்கட்டும். தி.மு.க., ஆட்சியை அகற்ற முழுமூச்சாக பாடுபடுவோம்.



தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேட்டில் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அதையெல்லாம் மறைப்பதற்காகத்தான், தி.மு.க., திட்டமிட்டு பல்வேறு காரியங்களை செய்துள்ளது.


பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்துக்கு தீர்ப்பு வந்ததும், அதை பெரிதாக்கி, எதிர்க்கட்சியினர் மீது குற்றச்சாட்டு சொல்வதும், அண்ணா பல்கலை பாலியல் சீண்டல் வழக்கில் தீர்ப்பு வந்ததும், அவ்வழக்கில் விரைந்து தீர்ப்பு வரவழைத்தது நாங்கள்தான் என கொண்டாடுவதன் பின்னணி இதுதான்.


தி.மு.க., ஆட்சி அவலங்கள் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக, அக்கட்சி என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு, சமீபத்திய நிகழ்வுகளே சாட்சி.


அவர்கள் என்னதான் மடைமாற்றம் செய்தாலும், துணை முதல்வருடைய தோழர்களாக இருக்கும் தம்பிகள் விரைவில் சிக்கப்போவது உறுதி. அவர்கள் சிக்கியதும் கக்கப்போகும் உண்மைகள், யாரையெல்லாம் சிக்கலுக்கு ஆளாக்கப் போகிறது என்பதை பார்க்க, தமிழகமே காத்திருக்கிறது.


இப்படி, தி.மு.க., மற்றும் ஆட்சியின் மேல் அனைவருக்கும் அதிருப்தி உள்ளது. புதிதாக வந்த கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன. தி.மு.க.,வை அப்புறப்படுத்த, அனைத்து கட்சிகளும் ஓரணியில் சேர வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.


பா.ம.க.,வில் நடப்பது உட்கட்சி பிரச்னை. அதில் கருத்து தெரிவிக்கக்கூடாது. பா.ஜ., கூட்டணி
பலமாக உள்ளது. தி.மு.க., கூட்டணி தோற்கும்; தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement