'நீட்' குறித்த விஜய் கருத்து; கிருஷ்ணசாமி வரவேற்பு

1

கோவை : நீட் தேர்வு குறித்து த.வெ.க., தலைவர் விஜய் கூறிய கருத்தை, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

நீட் தேர்வு குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் சரியான கருத்தையே கூறி இருக்கிறார். தமிழகத்தில், ஓராண்டுக்கு, 10 லட்சம் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்கின்றனர்.

அதில், மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை என 4 துறைகள் முன்னிலை வகிக்கின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளில், நீட் தேர்வால், பல ஆயிரம் ஏழை மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்று, நன்கொடை இல்லாமல், மருத்துவராகி உள்ளனர்.

மாணவர்கள் மத்தி யில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல், மிக குறுகிய கண்ணோட்டத்துடன், தவறான பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

கடந்த மூன்று தேர்தல்களில் வாக்குறுதி கொடுத்து, வெற்றி பெற்றவர்கள், நீட் ஒழிப்பு ரகசியத்தை சொல்லாமல், மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருந்து வருகின்றனர்.

அவர்கள் நீட் குறித்து உண்மையைப் பேசி இருந்தால், இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது. நீட்டை ஒழிப்போம் என தவறான வழிகாட்டுதலை யார் செய்தாலும், தமிழ் மக்களுக்கு, துரோகம் செய்தவர்கள்.

இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement