கமல் படம் 'ரீ ரிலீஸ்' கிடையாது தயாரிப்பாளர் மஞ்சு திட்டவட்டம்

பெங்களூரு: ''எங்களுக்கு பணத்தை விட, மொழி பற்று முக்கியம். நடிகர் கமல் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும் முடிவை கைவிட்டுள்ளேன்,'' என, கன்னட சினிமா தயாரிப்பாளர் மஞ்சு தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக, தான் கூறியது அன்பினால் என, நடிகர் கமல் கூறியுள்ளார்.

அதே அன்போடு மன்னிப்பு கேளுங்கள் என, நாங்களும் கேட்கிறோம். அவரது பேச்சினால், கன்னடர்களுக்கு ஏற்பட்ட மன வலியை புரிந்து கொண்டு, அவராகவே மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்டால், பெரிய மனிதராவார்.

கமல் நடித்த ராமா ஷியாமா பாமா - தமிழில் சதி லீலாவதி என்ற பெயரில் வெளியானது. கமல், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா, கல்பனா நடித்திருந்தனர். திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய நினைத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தேன்.

அவர் மன்னிப்பு கேட்காததால், அந்த திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும் எண்ணத்தை கைவிட்டுள்ளேன். எனக்கு பணத்தை விட, மொழியே முக்கியம். மொழியை விற்பனைக்கு வைத்து, பணம் சம்பாதிக்கும் கட்டாயம் எனக்கு இல்லை. நமது மொழி, நமது தன்மானம்,

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement