சொத்து சேர்த்த 7 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா ரெய்டு

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த, ஏழு அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார், நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் மீது புகார்கள் வரும்போது, அவர்களின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்துகின்றனர். நகை, பணம், சொத்து ஆவணங்கள், வாகனங்களை பறிமுதல் செய்வது நடக்கிறது.

ஆனாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதை மட்டும், அரசு அதிகாரிகள் நிறுத்தவே இல்லை. இந்நிலையில் பெலகாவியில் தேவராஜ் அர்ஸ் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட தலைவராக பணியாற்றும் சித்தலிங்கப்பா; பாகல்கோட் கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதல் நிலை உதவியாளர் சைலஜா சுபாஷ்; பல்லாரி பொதுப்பணி துறை இன்ஜினியர் அமின் முக்தர் அகமது.

தாவணகெரேயின் படா கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி ராமகிருஷ்ணா; உடுப்பி மெஸ்காம் கணக்காளர் கிரிஷ் ராவ்; கதக் நிர்மிதி கேந்திரா திட்ட அதிகாரி கங்காதர் சிரோல்; தார்வாட் பொதுப்பணி துறை தலைமை இன்ஜினியராக பணியாற்றும் சுரேஷ் ஆகிய, ஏழு அதிகாரிகளும் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த ஏழு அதிகாரிகளின் வீடுகளில் நேற்று காலை 7:00 மணி முதல், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்த ஆரம்பித்தனர். படுக்கை, சமையல் அறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

சோதனையின்போது சொத்து வாங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். நேற்று இரவு வரை சோதனை நடந்தது.

Advertisement