மாகடி, குனிகல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு டயர்களுக்கு தீவைத்து விவசாயிகள் போராட்டம்

துமகூரு: ஹேமாவதி அணை தண்ணீரை துமகூரில் இருந்து மாகடி, குனிகல்லுக்கு கொண்டு செல்ல எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஜோதி கணேஷ், சுரேஷ் கவுடா, மடாதிபதிகள் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சாலையில் டயர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. எம்.எல்.ஏ.,க்கள், விவசாயிகளை கைது செய்த போலீசார் பின்னர் விடுவித்தனர்.

ஹாசன் கொரூரில் உள்ள ஹேமாவதி அணையின் தண்ணீர், துமகூரு மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

இந்த அணையில் இருந்து ஆண்டிற்கு 24 டி.எம்.சி., தண்ணீரை துமகூருக்கு கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக துமகூருக்கு 24 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கவே இல்லை.

இந்நிலையில் துமகூருக்கு கிடைக்கும் தண்ணீரில் 3 டி.எம்.சி., தண்ணீரை குழாய்கள் மூலம், குனிகல், மாகடிக்கு கொண்டு செல்ல, 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., ஆட்சியின்போது முடிவு எடுக்கப்பட்டது.

அப்போது நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த, தற்போதைய துணை முதல்வர் சிவகுமார், இந்த பணிகளை முடிக்க மும்முரம் காட்டினார்.

இந்த திட்டத்தை தனது கனவு திட்டம் என்று அறிவித்தார். அதன்பின் ஆட்சி மாற்றம் நடந்த பின், பணிகள் அப்படியே நின்று போனது.

நடவடிக்கை



தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சி நடப்பதாலும், நீர்ப்பாசனத் துறை அமைச்சராக சிவகுமார் இருப்பதாலும், மாகடி, குனிகல்லுக்கு ஹேமாவதி தண்ணீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தார்.

துமகூரின் குப்பி தாலுகா சுங்கபுரா பகுதியில், தண்ணீரை திருப்பி விட குழாய்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதற்கு துமகூரு மாவட்ட பல்வேறு சங்கத்தினர், விவசாயிகள் போராட்டம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் சிவகுமார், பெங்களூரு தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், திட்டத்தை நிறைவேற்ற உறுதியாக உள்ளார்.

மாகடி, குனிகல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற கோரி சுங்கபுராவில் நேற்று போராட்டம் நடத்தப்படும் என்று போராட்ட குழு அறிவித்திருந்தது.

கைது



இதனால் நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை சுங்கபுரா கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, குப்பி தாசில்தார் ஆரத்தி உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் இந்த தடையையும் மீறி நேற்று பங்காபுரா கிராமத்தில் போராட்டம் நடந்தது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் துமகூரு ரூரல் சுரேஷ் கவுடா, துமகூரு நகர் ஜோதி கணேஷ் தலைமையில் நடந்த போராட்டத்தில் மடாதிபதிகள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

பணிகள் நடந்து வரும் இடத்திற்கு போராட்டக்காரர்கள் சென்று, கால்வாய் இணைப்பு பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழாய்களை தள்ளி மண்ணால் மூடினர்.

இதனால் நிலைமையை கட்டுப்படுத்த எம்.எல்.ஏ.,க்கள், விவசாயிகளை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர். கோபம் அடைந்த பல்வேறு சங்கத்தினர், விவசாயிகள் சாலையில், டயர்களை போட்டு தீ வைத்தனர்.

சுங்கபுரா கிராமம் வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி, டயரில் இருந்த காற்றை பிடுங்கிவிட்டனர்.

பெங்களூரு - கார்வார் தேசிய நெடுஞ்சாலையில் சேற்றை கொட்டினர். இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்கள் மதியமே விடுவிக்கப்பட்டனர்.

'குனிகல், மாகடிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் அறிவியல்ரீதியாக இல்லை. இந்த பணிகளை அரசு நிறுத்த வேண்டாம்.

'இல்லாவிட்டால் உயிரை கொடுத்தாவது பணிகளை நிறுத்துவோம்' என போராட்டக் குழு அறிவித்துள்ளது.

Advertisement