அரசு பஸ் மீது மோதிய கார் ஆந்திராவை சேர்ந்தவர் பலி

நெலமங்களா: பெங்களூரு நெலமங்களா பகுதியில் உள்ள தோனாசினகுப்பே என்ற இடத்தில், நேற்று காலை துமகூரிலிருந்து பெங்களூரு நோக்கி கர்நாடக போக்குவரத்துக் கழக அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

எதிர் திசையில் வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது.

இதில் கார் பலத்த சேதமடைந்தது. விபத்தை பார்த்த பிற வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நெலமங்களா போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளின் உதவியுடன் காரில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர்.

அப்போது, காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் ஆந்திராவை சேர்ந்த ஓபல் ரெட்டி, 27, என தெரிய வந்துள்ளது. இவர், பெங்களூரின் அத்திபள்ளியில் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்தார்.

இவர், தன் நண்பர்களான சுனில், திவ்யாவுடன் ஆந்திராவிலிருந்து பெங்களூரு வந்துள்ளார். விபத்தில் சிக்கிய சுனிலுக்கு தலையில் பலத்த காயமும், திவ்யாவுக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement