மது விற்பனை வேண்டாம் செல்லமுத்து வேண்டுகோள்

பல்லடம் : பல்லடத்தை அடுத்த, கோடங்கிபாளையம் உழவாலயம் அலுவலகத்தில், உழவர் உழைப்பாளர் கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரத் தலைவர் ரங்கநாதன், மாவட்டத் தலைவர்கள் மகுடேஸ்வரன், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல், கரும்பு, மஞ்சள், பால், தேங்காய், மக்காச்சோளம், தக்காளி, வெங்காயம், கத்திரி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் கண்வலி விதை ஆகியவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து, விவசாயிகள் அவ்வப்போது நஷ்டத்தை சந்தித்து கடனாளி ஆகின்றனர்.

எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரையின்படி, விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது நாளுக்கு நாள் அரிதாகி வருகிறது. இதனால், உற்பத்தி குறைவதுடன், உணவுப் பொருட்களின் விலைவாசியும் உயர வாய்ப்பு உள்ளது.

எனவே, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மனித உயிர்களை பலி வாங்கும் டாஸ்மாக் மதுபானங்களை நிறுத்தி, உடலுக்கு நன்மை ஏற்படுத்தும் 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப சொட்டுநீர் பாசன உபகரணங்களுக்கான மதிப்பீட்டை தயார் செய்ய வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement