உடைந்த குழாய் ஊற்றெடுக்கும் குடிநீர்

திருப்பூர் :எஸ்.வி., காலனியில் சேதமடைந்த குழாய் சரி செய்யப்படாமல் குடிநீர் வீணாகும் அவலம் தொடர்கிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்., ரோடு பகுதிக்கும், கொங்கு மெயின் ரோடு பகுதிக்கும் இடையில் எஸ்.வி., காலனி பகுதி அமைந்துள்ளது. இதன் பிரதான வீதியில் குடிநீர் வினியோக குழாய் பதிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இக்குழாயில் ஓரிடத்தில் உடைப்பு ஏற்பட்டது. இது பல நாட்களாக சரி செய்யப்படாமல் உடைப்பு பெரிதாக மாறியுள்ளது. இதனால், குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரத்தில் இந்த உடைப்பிலிருந்து பெருமளவு குடிநீர் வெளியேறி, ரோட்டில் பாய்ந்து வீணாகிறது.

குடிநீர் வீணாவது மட்டுமின்றி, ரோட்டில் சென்று தேங்கி ரோட்டையும் சேதப்படுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

குடிநீர் வினியோகத்தை கண்காணிக்கும் ஊழியர்கள் இது போல் உடைப்பு ஏற்படும் போது, உடனுக்குடன் அதை சரி செய்ய வேண்டும். குடிநீர் விரயம், ரோடு சேதம் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும்.

Advertisement