பணம் கேட்டது யார்? மேயரிடம் கேள்வி எழுப்பும் அ.தி.மு.க., - விவசாயிகள் சங்கம்

திருப்பூர் : 'மாநகராட்சி சார்பில், காளம்பாளையம் பகுதியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் பணம் கேட்டு மிரட்டியது யார் என்பதை, மேயர் தெளிவுபடுத்த வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுள்ளது.

இது குறித்து, சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு பிரிவு அணி செயலாளர் சதீஷ்குமார் அறிக்கை:

திருப்பூர் மாநகராட்சி சார்பில் கழிவுகளை, காளம்பாளையம் போன்ற புறநகர் கிராமப்பகுதிகளில் கொட்டி சுகாதார கேட்டை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக அமல்படுத்தவில்லை.

குப்பைகளை சேகரித்து குப்பைக் குழியில் கொட்டுவதோடு, தனியார் கான்ட்ராக்ட் நிறுவனத்தினர் தங்களது பணியை நிறுத்திக் கொள்கின்றனர். குப்பை வரி என, பெரும் தொகையை வசூலித்தும், அதற்கு நிரந்தர தீர்வு காணாமல், குப்பைக்குழியில் கொட்டுகின்றனர்.

மாறாக, குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் வாயிலாக, இத்திட்டத்தில் நடக்கும் பல கோடி ரூபாய் முறைகேடுகளை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. குப்பை பிரச்னையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவையும் மதிக்கவில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கின் மீது, 6 மாதத்திற்கு மேலாகியும் பதில் அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளனர்.

காளம்பாளையம் பகுதியில் குப்பை கொட்டும் விவகாரத்தில், சிலர் பணம் கேட்டு மிரட்டினர்; அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் எனவும் மேயர் குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் யார், யார் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement