பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு தான் முழு அதிகாரம்

6

திண்டிவனம் : 'பா.ம.க., விதிகளின் படி, நிறுவனர் ராமதாசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது' என, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.


திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசுடன் ஆலோசனை நடத்திய பின், அவர் அளித்த பேட்டி: பா.ம.க.,வில் எல்லோரும் நினைக்கும் அளவுக்கு பெரிய அளவில் பிளவு எதுவும் இல்லை. எந்தெந்த கட்சிகளில் பிளவு வருகிறதோ, அந்த கட்சிகளில் எல்லாம், யாருக்கு அதிகாரம் என்ற கேள்வி எழுகிறது. தி.மு.க., பிளவு பட்டபோது, கருணாநிதிக்கு அதிகாரமா, எம்.ஜி.ஆருக்கு அதிகாரமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது பா.ம.க.,விலும் அப்படித்தான் ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து முரணுக்கு விரைவில் பேச்சு மூலம் தீர்வு எட்டப்படும்.


கட்சியில் அப்பா - மகன் இடையே நடக்கும் பிரச்னையில் யார் செய்வது சரி என்ற குழப்பம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வை பொருத்தவரை ராமதாஸ் உழைப்பால் உருவான கட்சி. இந்த கட்சிக்கு விதிகளை உருவாக்கும்போது, ராமதாசுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படிதான், தைலாபுரத்தில் இருந்து எல்லாம் நடந்து வருகிறது. எந்த முடிவு எடுத்தாலும், ராமதாஸ் எடுக்கிற முடிவு தான் நடைமுறைக்கு வரும்.



அதுவே இறுதியானது. இப்போது அவர் மகன், கட்சிக்கு தலைவராக இருக்கிறார். அதனால், பாச உணர்வில் உரிமை போராட்டம் நடக்கிறது. இந்த உரிமை போராட்டம், கட்சியை பாதிக்கக்கூடாது என்பதே மூத்த தலைவர்கள் பலருடைய விருப்பம். பா.ம.க., வன்னியர் என்ற பெரும் சமுதாயத்தை முன்னிறுத்தி நடத்தப்படும் கட்சி. இதில், அரசியல் கருத்துக்கள் மேலோங்கி, தனிமனித உணர்வுகள் வெற்றிபெற வழியில்லை.


ஆனால், அரசியலை வைத்துதான் வன்னியர் சங்கம் நடப்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வன்னியர் சங்கத்தை அடிப்படையாகவும் பிரதானமாகவும் வைத்துதான் கட்சி. இது புரியாமல் சிலர், பெரிய அளவில் கட்சியை கட்டமைக்க கடும் விளம்பரம் செய்து வருகிறார்கள். வன்னியர் சங்கம் ஏற்படுத்திய கட்சி தான் பா.ம.க.,


இன்றைக்கல்ல; என்றைக்குமே வன்னியர் சங்கம்தான், பா.ம.க.,வை வழிநடத்தும். அப்பா - மகன் பிரச்னையில், வன்னியர் சங்கம் யாருக்கும் ஆதரவு கிடையாது. இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் விருப்பம்.


ராமதாஸ் கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை மாற்றியவுடன், அவரே நீடிப்பார்
என அன்புமணி கூறுகிறார். முழுக்க முழுக்க ஈகோ பிரச்னையால் உருவாகி இருக்கும் குழப்பங்கள். கட்சி விதிகளின்படி, அமைப்பு அதிகாரம் அனைத்தும் ராமதாசுக்கு தான் உள்ளது.


அந்த விதி, இன்று வரை மாற்றப்படவில்லை. பொதுக்குழுவில் முடிவெடுத்துத்தான், விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். ஆனாலும், ராமதாசின் முடிவுகளை தான் பொதுக்குழு அங்கீகரிக்கும். பிரச்னைகளுக்கு தீர்வு தேடி, பொதுக்குழுவை விரைவில் கூட்டுவோம்.
இவ்வாறு அருள்மொழி கூறினார்.

Advertisement