உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு ஸ்பான்சர் செய்த முதல்வரின் மருமகன்; பா.ஜ., குற்றச்சாட்டு

12


திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யுடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் ஸ்பான்சர் செய்ததாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.


ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யுடியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் கைது செய்தனர். அவரது லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


டில்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் துாதரகத்தின் பணியாளர் டேனிஷ் என்பவரின் உதவியுடன், பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு வி.வி.ஐ.பி., போல் நடத்தப்பட்டார். மேலும், ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு சென்று வந்த அதே சமயத்தில், சீனாவுக்கும் பயணித்துள்ளார். இதனால், அவர் மத்திய உளவுப்பிரிவின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.


இந்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த சுற்றுலாத்துறையின் நிகழ்ச்சியில், உளவாளி ஜோதி மல்ஹோத்ரா பங்கேற்றதாகவும், அதற்கு முழுக்க முழுக்க சுற்றுலா துறையே ஸ்பான்சர் செய்துள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.


இது குறித்து கேரள பா.ஜ., மாநில தலைவர் கே.சுரேந்திரன் விடுத்த எக்ஸ் தளப்பதிவில், "பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கண்ணூர் பயணத்திற்கு கேரள சுற்றுலாத்துறை ஸ்பான்சர் செய்துள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஷ் தான் இருக்கிறார். ஜோதி மல்ஹோத்ரா யாரை சந்தித்தார்? எங்கு சென்றார்? அவரது வந்ததற்கான உண்மையான நோக்கம் என்ன? பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவாளிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?", என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


ஜோதி மல்ஹோத்ரா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், கேரள சுற்றுலாத்துறை நிகழ்ச்சியில் அரசின் ஸ்பான்சர் மூலம் அவர் கண்ணூர் வந்ததாக எழுந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே, நேற்று டில்லி, மஹாராஷ்டிரா (மும்பை), ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாகிஸ்தான் உளவு விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்புகளையும், நிதி தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement