ஹமாஸ் கூறுவதை ஏற்க முடியாது என்கிறது அமெரிக்கா; போர் நிறுத்தம் ஏற்படுவதில் சிக்கல்

வாஷிங்டன்: போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் படையினர் அளித்த பதிலை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன.
இந்த போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் குறித்து ஹமாஸ் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிரந்தர போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும். காசாவில் இருந்து பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெற வேண்டும். காசாவில் வசிக்கும் மக்களுக்கு உதவி பொருட்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இதனை ஏற்றுக் கொண்டால் பிணை கைதிகள் 10 பேரை விடுதலை செய்வோம். மேலும் உயிரிழந்த பிணைக்கதிகள் 18 பேரின் உடலை அனுப்பி வைப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக, ஹமாஸ் படையினரின் பதிலை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இது குறித்து, அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் கூறியதாவது: நாங்கள் உருவாக்கி உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் படையினரின் பதிலை பெற்றேன். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் உருவாக்கி உள்ள ஒப்பந்தத்தை ஹமாஸ் படையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படியே ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தையை உடனடியாக இந்த வாரம் தொடங்கலாம். உயிருடன் உள்ள பிணைக்கைதிகளில் பாதி பேரும், இறந்தவர்களில் பாதி பேரும் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பி வருவார்கள். இதன் மூலம் நிரந்தர போர் நிறுத்தத்தை கொண்டுவர முடியும். பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான சூழலை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




