அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க புதிய திட்டம் அமல்

5

சேலம்: அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, 'லெவல் அப்' என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆங்கிலம் கற்கும் திறனில், தனியார் பள்ளிகளுடன் போட்டிபோட முடியாத நிலையில் உள்ளதே, முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் ஆங்கில திறன்களை வளர்க்க, 'லெவல் அப்' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, பள்ளிகளில் ஆங்கில திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன், ஆங்கிலம் பேசுதல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மாணவர்கள் எளிதில் ஆங்கில மொழியின் அடிப்படை திறன்களை அடையும் வகையில், ஜூன் முதல் டிசம்பர் வரை ஏழு மாதங்களுக்கு, ஆசிரியர்களுக்கு மாத வாரியான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



தற்போது ஜூன் மாதத்துக்கான இலக்கு, பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர் பயன்பாட்டுக்காக தனி இணையதளம் துவக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு அலுவலர்கள் அவ்வப்போது மீளாய்வு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement