குளங்கள் சீரமைக்கும் திட்டம்; ஊரக வளர்ச்சி துறை கைவிரிப்பு

3

சென்னை: நிதி நெருக்கடியை காரணம் காட்டி, கோடையில் குளங்களை சீரமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என, ஊரக வளர்ச்சி துறை கைவிரித்து உள்ளது.


தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில், 25,000க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள 5,000 நீர்நிலைகளை புனரமைக்க 500 கோடி ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பரில் ஒதுக்கீடு செய்தார்.


பருவமழை துவங்கி விட்டதால், இந்த நிதியில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் சீரமைப்பு செய்வதாக கூறப்படும் குளங்களில், தற்போது புதர் மண்டி கிடக்கின்றன.



இதற்கிடையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்ததால், தற்போது 29 மாவட்டங்களில் தனி அதிகாரிகள் வாயிலாக ஊரக உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.


கோடை காலத்தில் நீர்நிலைகளை துார்வாரும் பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஊரக உள்ளாட்சி தனி அதிகாரி களிடம் இருந்து, ஊரக வளர்ச்சி துறை தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது.

அரசின் நிதி நெருக்கடியை காரணம் காட்டியுள்ள ஊரக வளர்ச்சித் துறை, 'அப்பணி மேற்கொள்ள தற்போது வாய்ப்பில்லை. அரசு மீண்டும் நிதி ஒதுக்கும்பட்சத்தில் மட்டுமே பணிகளை மேற்கொள்ளலாம்' என, தனி அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளது.


தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளதால், பல நீர்நிலைகளுக்கு நீர்வரத்தும் துவங்கியுள்ளது. இதனால, அங்கு துார்வாரும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகிஉள்ளது.

Advertisement