குறுக்கு வழியில் எம்.எல்.சி., ஆவோரால் மேல்சபை தலைவர்... எரிச்சல்! தகுதியானவர்களை தேர்வு செய்யுமாறு முதல்வருக்கு கடிதம்

கர்நாடக மேல்சபை 75 உறுப்பினர் பலம் கொண்டதாகும். இவற்றில் யோகேஸ்வர், பிரகாஷ் ராத்தோட், திப்பேசாமி, வெங்கடேஷ் ஆகியோரின் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடத்துக்கு பலர் போட்டி போடுகின்றனர்.


நான்கு இடங்களுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்து, கவர்னருக்கு மாநில அரசு சிபாரிசு செய்ய வேண்டும். முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், தங்களுக்கு நெருக்கமானவர்களை அமர்த்த முயற்சிக்கின்றனர்.



பொதுவாக கல்வி, மருத்துவம், பொதுச் சேவை, பத்திரிகை உட்பட, பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை செய்தவர்கள், மேல்சபைக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சமீப நாட்களாக எந்த சாதனையும் செய்யாத, அரசியல் பிரமுகர்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, குறுக்கு வழியில் மேல்சபைக்கு வருகின்றனர்.


கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததால், அரசின் சாதனைகளை தெரிவிக்க, ஜூன் 6ம் தேதியன்று, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சித்தராமையாவும், டில்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். டில்லியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உட்பட மேலிட தலைவர்களை சந்திப்பர்.


கட்சி நிலவரம், அரசின் எதிர்கால திட்டங்கள், இரண்டு ஆண்டு சாதனைகள் என, முக்கிய விஷயங்கள் குறித்து, ஆலோசனை நடத்துவர். அதே நேரத்தில், மேல்சபையில் காலியாக உள்ள, நான்கு நியமன உறுப்பினர் இடங்களை நிரப்புவது குறித்தும், மேலிட தலைவர்களுடன், ஆலோசனை நடத்தவுள்ளனர். மேல்சபை நியமன உறுப்பினர்களின் பெயர்களையும் சிபாரிசு
செய்வர்.

தங்களுக்கு நெருக்கமான, அரசியல் பிரமுகர்களை மேல்சபை உறுப்பினர்களாக நியமிக்க, முதல்வரும், துணை முதல்வரும் விரும்புகின்றனர். இது மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டிக்கு, எரிச்சல் அளித்துள்ளது. 'குறுக்கு வழியில் யாரும் மேல்சபையில் நுழைய வாய்ப்பளிக்க கூடாது' என, வலியுறுத்தியுள்ளார்.



இது தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி எழுதிய கடிதத்தில் கூறியதாவது:


கர்நாடக மேல்சபைக்கு தனி மதிப்பு, கவுரவம் உள்ளது. 75 உறுப்பினர் பலம் கொண்ட மேல்சபைக்கு, உள்ளாட்சிகள் மூலமாகவும், சட்டசபை எம்.எல்.ஏ.,க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியும், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


மாநிலத்தில் கலை, இலக்கியம், சமூக சேவை, இசை, ஊடகம் என, மற்ற துறைகளில் வியக்கத்தக்க சாதனை செய்தவர்கள் மேல்சபைக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். அரசு சிபாரிசு செய்தவர்களை கவர்னர் நியமிப்பார்.


இதற்கு முன் பிரபல ஹிந்துஸ்தானி பாடகி கங்குபாய், மல்லிகார்ஜுன மன்சூர், குண்டப்பா, அனந்தநாக், சாமண்ணா உட்பட பலர் மேல்சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தங்களின் அறிவையும், அனுபவத்தையும் மாநில நலனுக்காக பயன்படுத்தினர். இதனால்தான் மேல்சபை, 'சிந்தனையாளர்களின் கூடம்' என, அழைக்கப்படுகிறது.


ஆனால் சமீப நாட்களாக, மேல்சபைக்கு நியமிக்கப்பட்ட நபர்களின் பின்னணியை பார்த்தால் வருத்தம் அளிக்கிறது. தேர்தலில் தோற்றவர்கள், அரசியல் தலைவர்களின் குடும்பத்தினர், தொழிலதிபர்கள் அதிகமாக நியமிக்கப்படுகின்றனர்.


தற்போது மேல்சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது, தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள். அரசியல் தலைவர்களின் அடிவருடிகள், குடும்பத்தினர் பின் வாசல் வழியாக மேல்சபைக்கு வருவதை நிறுத்த வேண்டும். இது பற்றி அரசு ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement