ஒரே நாளில் 8 ஆன்மிக தலங்களில் வழிபாடு; 'திவ்ய தரிசனம்' திட்டத்திற்கு அமோக வரவேற்பு

பெங்களூரு : ஒரே நாளில் எட்டு ஆன்மிக தலங்களை தரிசிக்கும் திவ்ய தரிசனம் சுற்றுலா திட்டத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது. டிக்கெட்டுகள் விற்பனை சூடு பிடித்து உள்ளது.
பி.எம்.டி.சி., 'ஏசி' பஸ்சில் பயணித்து பெங்களூரு நகரில் உள்ள எட்டு முக்கிய கோவில்களை, ஒரே நாளில் சுற்றி பார்க்கும் வகையிலான சுற்றுலா திட்டம் நேற்று முன் தினம் துவக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 'திவ்ய தரிசனம்' என பெயரிடப்பட்டு உள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கடந்த 28ம் தேதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இத்திட்டம் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே செயல்படும்.
இந்த தரிசனத்துக்கு நான்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஐந்து நிமிட இடைவெளிகளில் பஸ்கள் இயங்கும். ஒரு பஸ்சில் 35 பயணியர் பயணம் செய்யலாம். பெண்கள் அமருவதற்கு தனி இருக்கைகள் உண்டு.
இதற்கான டிக்கெட்டை மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு நேரில் சென்று வாங்கி கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் கே.எஸ்.ஆர்.டி.சி., இணையதளத்திற்கு சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். பெரியவர்களுக்கு 450 ரூபாய்; சிறியவர்களுக்கு 350 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அடையாள அட்டை
இத்திட்டத்தில் பயணம் செய்ய விரும்புவோர், ஏதாவது ஒரு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
பயணத்தின் போது, காலை, மதியம் என இரு வேளை உணவுக்காக பஸ் நிறுத்தப்படும். உணவு செலவு பயணியருடையது.திட்டத்தின் துவக்க காலம் என்பதால் தற்போது பஸ்சில் நடத்துநர் உள்ளார். வரும் நாட்களில் டிரைவர் மட்டுமே இருப்பார். தன் இருக்கையின் அருகில் உள்ள மைக் மூலம், அவரே பயணியருக்கு அறிவுரை வழங்குவார்.
வரவேற்பு
இத்திட்டத்தில், வழிகாட்டி என யாரும் பிரத்யேகமாக நியமிக்கபடவில்லை. ஆனால், கோவிலின் சிறப்பு பற்றி, அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் தெரிவிப்பர்.
கோவிலுக்கு செல்லும் பயணியர் எளிதில் சாமி தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் துவங்கிய இரண்டு நாட்களிலேயே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 350க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து உள்ளது. அடுத்த வாரத்திற்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.
இத்திட்டம் மூலம் கோவில்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை பயணியர் அறியலாம். மேலும், மக்களிடையே பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்துவது முக்கிய குறிக்கோளாகும்.
மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் விபரங்களை அறிந்து கொள்ள: 77609 91170, 080 2248377 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு