நெடுஞ்சாலையில் சோலார் பேனலுடன் போக்குவரத்து எச்சரிக்கை விளக்கு அமைப்பு

உத்திரமேரூர்:புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலை 32 கி.மீ., துாரமுடையது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

இருவழிச் சாலையாக இருந்த இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, 2022ல் இச்சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போது, சாலையில் மையத்தடுப்புகள் அமைத்து, அதன்மீது அரளிச் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பின், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்போடு செல்ல, போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேடபாளையம் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகள் இல்லாமல் இருந்தது. இதனால், இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

தற்போது, அப்பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில், நான்கு இடங்களில் சோலார் பேனலுடன் போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விளக்குகள் 24 மணி நேரமும் இயங்கும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement