வாலாஜாபாத் ரயில்வே சாலையில் எச்சரிக்கை பலகை அமைப்பு

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ரவுண்டனா பகுதியில் பிரிந்து ஒரகடம் வழியாக தாம்பரம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, வாரணவாசி, தேவரியம்பாக்கம், படப்பை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் மற்றும் ஊத்துக்காடு, புத்தகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரவு, பகலாக பல்வேறு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இச்சாலை சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, வாலாஜாபாத் ரயில்வே பாலம் அருகாமையிலான சாலை அகலப்படுத்தப்பட்டு சாலையில் மைய தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

எனினும், அதற்கு முன்னதான சிறிது துாரம் சாலை ஒருவழிப் பாதையாகவே உள்ளது. இதனால், வாலாஜாபாத் ரயில்வே பாலத்தை கடக்கும் போது, முன்னாள் செல்லக்கூடிய லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை முந்தி செல்லும் வாகனங்கள், சாலை மைய தடுப்பில் மோதி விபத்திற்குள்ளாகின்றனர்.

இதனால், அப்பகுதியில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ள பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

அக்கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், நேற்று, வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் அருகாமையிலான சாலையின் மைய தடுப்பு பகுதியில், விபத்து அபாய எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது.

Advertisement