மஹாராஷ்டிராவுக்கு மட்டும் அனுமதி அளித்தது ஏன்? மத்திய அரசுக்கு கேரளா கேள்வி

14

திருவனந்தபுரம்: வெளிநாட்டு நிதியை பெற மஹாராஷ்டிராவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், “கேரளாவுக்கு மட்டும் அனுமதி மறுத்தது ஏன்?” என கேள்வி எழுப்பிய அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், மாநிலங்களிடையே மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் - 2010ன் கீழ், முதல்வரின் நிவாரண நிதிக்கு வெளிநாட்டு நிதியை பெற, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், திருவனந்தபுரத்தில் நேற்று கூறியதாவது:

கேரளா, கடந்த 2018ல் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான உதவிகள் கிடைக்கவிருந்தன. இதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால், மத்திய அரசு அனுமதி தரவில்லை.

தற்போது, வெளிநாட்டு நிதியை பெற மஹாராஷ்டிரா அரசுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது? அனைத்து விவகாரங்களிலும் மத்திய பா.ஜ., அரசு அரசியல் செய்கிறது.

மஹாராஷ்டிரா அரசு வெளிநாட்டு உதவியை பெறுவதில், கேரளாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், கேரளாவுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது; அதில் எந்த நியாயமும் இல்லை.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, நாட்டின் கூட்டாட்சி கொள்கைகளை மீறுவதாகும். பேரிடர்களின் போது கூட, அரசியல் காரணங்களுக்காக மாநிலங்களை வேறுபடுத்துவது, மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். நாட்டின் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement