திருமுக்கூடல் சாலையில் சிதறிய ஜல்லி கற்களால் விபத்து அபாயம்

திருமுக்கூடல்:பழையசீவரம் - திருமுக்கூடல் சாலையில், பாலாற்று மேம்பாலம் உள்ளது. மேம்பாலம் அருகே திருமுக்கூடல் சாலையில் இருந்து, பினாயூர் மலை வழியாக பினாயூர் மற்றும் பழவேரி உள்ளிட்ட கிராமங்களுக்கான பிரிவு சாலை உள்ளது.

சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மதுார், சிறுதாமூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்தும், இச்சாலை வழியாக பல பகுதிகளுக்கு லாரிகள் வாயிலாக லோடு ஏற்றிச் செல்லப்படுகிறது.

இவ்வாறான சில லாரிகளில், தார்ப்பாய் மூடாமல் ஓவர் லோடு ஏற்றி செல்வதால், திருமுக்கூடல் - பினாயூர் சாலையில் ஜல்லி கற்கள் கீழே கொட்டி ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

குறிப்பாக திருமுக்கூடல் பாலாற்று மேம்பாலம் அருகாமையிலான சாலையில், அதிக அளவிலான ஜல்லி கற்கள் சிதறி காணப்படுகின்றன.

இதனால், இச்சாலை வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.

எனவே, திருமுக்கூடல் பாலாற்று மேம்பாலம் அருகிலான சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களை அப்புறப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement