ஜெ.இ.இ., பயிற்சி அகாடமி சங்கரா பல்கலையில் துவக்கம்

ஏனாத்துார்,:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலையில், பொறியியல் மற்றும் அறிவியல் துறையில் உள்ள எதிர்கால வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நேற்று முன்தினம் நடந்தது. பேராசிரியர் வெங்கட்ரமணன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீநிவாசு, சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.

சென்னை இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி இயக்குநர் காமகோடி, திட்டமிடல், புல தலைவர் சாரதி சென்னை சி.எம்.ஐ., பேராசிரியர் சந்திரமவுலி ஆகியோர், தற்போதைய மற்றும் எதிர்கால பொறியியல், அறிவியல் மற்றும் அதை சார்ந்துள்ள பட்ட படிப்பு பற்றி மாணவ - மாணவியருடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட், 3டி பிரிண்டிங் குறித்து மாணவ - மாணவியருக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீராமச்சந்திரன், பல்கலை சார்பு துணைவேந்தர் வசந்த்குமார் மேத்தா, பொறியியல் புல தலைவர் ரத்னகுமார் ஆகியோர் முன்னிலையில், காஞ்சி மஹா சுவாமி இந்திய ஆட்சி பணியாளர் தேர்வு பயிற்சி அகாடமி, சங்கரா ஜெ.இ.இ., தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு அகாடமியை, சென்னை இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பேராசிரியர் மற்றும் இயக்குநர், காமகோடி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பட்டய கணக்காளர் வகுப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. துணை தலைவர் ராஜ்மோகன் நன்றி கூறினார். இதில், 500க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement