ஜமாத் இஸ்லாம் கட்சிக்கான தடையை நீக்கியது கோர்ட்

3

டாக்கா:ஜமாத் - இ - இஸ்லாம் கட்சிக்கு கடந்த, 12 ஆண்டுக்கு முன் விதித்த தடையை, வங்கதேச உச்ச நீதிமன்றம் நேற்று நீக்கி உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து, கடந்த 1971ல் பிரிந்து தனி நாடாக உருவானது, நம் அண்டை நாடான வங்கதேசம்.

அப்போது நடந்த போரின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத் - இ - இஸ்லாம் கட்சி மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் கடந்த 2-013ல் உத்தரவிட்டது; மேலும், தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை, தேர்தல் கமிஷன் 2018ல் ரத்து செய்தது.

கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தின்போது, வன்முறையைத் துாண்டியதாகக் கூறி, ஜ-மாத் - இ - இஸ்லாம் கட்சிக்கு, அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா முழு தடை விதித்தார்.

இந்நிலையில், தற்போது நிர்வாகத்தை கவனித்து வரும் இடைக்கால அரசு இந்தத் தடையை நீக்கியது.

இந்தக் கட்சியின் தலைவரான ஏ.டி.எம்.அஸ்ராவுல் இஸ்லாம், கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்தார்.

கடந்த 2013 உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதை விசாரித்த தீர்ப்பாயம், ஜமாத் - இ - இஸ்லாம் கட்சிக்கான தடைகளை நீக்குவதாகவும், மீண்டும் அதை பதிவு செய்யும்படியும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement