டில்லி தாக்குதலுக்கு தமிழகம் ஒருபோதும் வீழாது: மதுரை தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

41


மதுரை: ''நான் இருக்கும் வரை, டில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழகம் வீழாது. தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்,'' என, மதுரை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்க்கமாக தெரிவித்தார்.


மதுரை, உத்தங்குடி கலைஞர் திடலில் அறிவாலயம் அரங்கில் துவங்கிய பொதுக்குழு கூட்டத்தில், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வரவேற்றார். டி.கே.எஸ்.இளங்கோவன் கூட்டத்தை துவக்கி வைத்தார். 27 தீர்மானங்களை நிர்வாகிகள் ஒவ்வொருவராக வாசித்தனர்.


புதிய உறுப்பினர் சேர்ப்பு திட்டம் குறித்த சிறப்பு தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார்.

கண்கள் தேடும்



கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நான் எந்த ஊருக்கு சென்றாலும் நம் கட்சி கொடி பறக்கிறதா என கண்கள் தேடும். தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், நகர்களிலும் அதிக கொடிகளை ஏற்றிய கை இந்த ஸ்டாலினின் கை.


ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, தி.மு.க., கருப்பு சிவப்பு கொடி, உதயசூரியன், அறிவாலயம் தான் நம் உயிர். தடம் மாறாத கொள்கை கூட்டம் நாம். அதனால் தான், எந்த கோமாளி கூட்டமும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது.


இது, ஏழாவது முறையாக வெற்றி வாகை சூட, மதுரையில் வியூகம் வகுக்கும் பொதுக்குழு. 'தி.மு.க., ஆட்சி அமைத்த பின், இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது' என்பது தான் தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும்; அதற்கான பொதுக்குழு தான் இது.


நான் மமதையில் பேசுகிறவன் அல்ல. 'கண்ணுக்கெட்டிய துாரம் வரை எதிரிகளே இல்லை' என்று ஆணவ குரலில் சொல்பவன் அல்ல. எந்த காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. பணிவு தான் தலைமை பண்பின் அடையாளம் என்பது தெரியும். சொல்லை விட செயலே பெரிது.


வரலாறு காணாத வெற்றியை பெற்றோம் என நான் சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான். என்னை தலைவனாக உருவாக்கியது நீங்கள் தான்.

நிரந்தரமானது



எந்த கட்சிக்கும் இப்படி உறுதிமிக்க உழைப்பாளி தொண்டர்கள் கிடைக்க மாட்டார்கள். கட்சி எப்படி நிரந்தரமானதோ, அதுபோல் ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.


தி.மு.க., ஆட்சிக்கு எதிரான அலையை விட, ஆதரவு அலை தான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க சிலர் நினைக்கின்றனர்.



கடந்த அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழகத்தை மீட்டிருக்கிறோம். மத்திய அரசு, நம் மாநில உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து போராடி வருகிறோம்.

நான் தலைவராக பொறுப்பேற்றது முதல், தொடர்ந்து வெற்றி பெறும் காரணங்களில் ஒன்று கூட்டணி. 2017ல் துவங்கி, தமிழக வரலாற்றில் இத்தனை தேர்தல்களுக்கு ஒரு கூட்டணி தொடர்ந்த சரித்திரம் இல்லை. இந்த கூட்டணி வலுவாக தொடர காரணம், கூட்டணி தோழர்களை மதித்து செயல்படுவது தான்.



நம் கூட்டணி தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும், பாசத்தோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு சேர்ந்து செயலாற்ற வேண்டும்.


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை அமித் ஷா அறிவித்தபோது, ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் பழனிசாமி. என்ன ஒரு அடக்கம். சசிகலா இவரை முதல்வராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக் ஷன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு; காலில் மட்டும் தான் விழவில்லை.

அ.தி.மு.க., ஒட்டுமொத்தமாக பா.ஜ.,வின் கன்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது. அடுத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் பா.ஜ.,வின் கன்ட்ரோலுக்கு கொண்டு செல்லத் தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால் தான் அமித் ஷா இங்கு அடிக்கடி வருகிறார். நான் மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன்; எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆளவே முடியாது. டில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' தான்.



இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும், 2.5 கோடி பேர் பயனடைந்துள்ளனர். கட்சியினர் எதிர்பாராமல் விபத்தில் இறந்தால், குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அந்த குடும்பத்துக்கு கட்சி சார்பில், 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். தொண்டர்கள் நம்பிக்கையே நமக்கு முதல் பலம்.


'நானும், என் குடும்பமும் கட்சிக்காக இருக்கிறோம். கட்சி எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது' என்ற எண்ணமே, 75 ஆண்டுகளாக இயக்கம் நிலைத்திருக்க காரணம். கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; எந்தளவுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவு கட்சியில் புது ரத்தம் பாயும்; செயல்பாடுகள் வேகமாகும்; வெற்றி உறுதியாகும்.


ஜூன் முதல் வாரம், கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்திக்க உள்ளேன். அப்போது, 'ஒன் டூ ஒன்' பேசுவோம். 'பூத்' அளவில் பெறும் ஓட்டுகள் தான் தொகுதியை வெற்றி பெறச் செய்யும். எனவே, மைக்ரோ மேனேஜ்மென்ட் முக்கியம். அதனால், நிர்வாகிகளிடம் மொபைல் போனில், 'எவ்வளவு உறுப்பினர்கள் சேர்த்து இருக்கிறீர்கள்' என கேட்பேன்; நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.


தலைவர் கருணாநிதி கவிதை, கதைகள், சினிமா வசனம் எழுதுவார்; இலக்கிய மேடைகளில் கலக்குவார். எனக்கு தெரிந்தது அரசியல் மட்டும் தான். தி.மு.க., இருக்கும் வரை, இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, டில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது; போராடும், வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement