விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது கத்திவாக்கம் 'டிஜிட்டல்' நுாலகம்

எண்ணுார்:எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில் 1962ம் ஆண்டு முதல் கிளை நுாலகம் செயல்படுகிறது. 2,000ம் ஆண்டில் கட்டடம் புனரமைக்கப்பட்டது. 40,000க்கும் மேற்பட்ட புத்தகங்களும், 3,700 வாசகர்களும் இருந்தனர்.

வெறும், 600 சதுர அடி கட்டடத்தில் நுாலகம் செயல்பட்டு வந்த நிலையில், இடப்பற்றாக்குறை பெரும் பிரச்னையாகவே இருந்தது. ஆனால், அதன்பின் முறையாக பராமரிக்காத காரணத்தால், கட்டடம் சேதமடைந்து மழைநீர் கசிய துவங்கியது.

இதனால் ஏராளமான புத்தகங்கள் வீணாகின. வேறு வழியின்றி, புத்தங்களை மூட்டை கட்டி பத்திரப்படுத்தப்பட்டது. மேலும், கத்திவாக்கம் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.

அதன்படி, மறைந்த முன்னாள் அமைச்சரான கே.பி.பி.சாமி இதற்கான முயற்சிகள் மேற்கொண்டார். பல்வேறு பிரச்னை காரணமாக, நுாலகம் கட்டும் பணிகள் துவங்க முடியவில்லை. தொடர்ந்து, அவரது சகோதரரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான கே.பி.சங்கர், தன் மேம்பாட்டு நிதியான ஒரு கோடி ரூபாய் செலவில், புதிய டிஜிட்டல் நுாலகம் கட்ட, 2023 ஆக., 23ல் அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கினர்.

பின், கூடுதல் நிதியாக, 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நுாலக கட்டுமான பணிகள் முடிந்து, தற்போது வர்ணம் பூசும் பணிகள் நடக்கின்றன. அதன்படி, உட்புற சுவரில் புத்தகம் மற்றும் படிப்பின் அவசியம் உணர்த்தும் வகையில், ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தொடர்ந்து, பல லட்ச ரூபாய் செலவில், பர்னிச்சர், பிளம்பிங், கம்ப்யூட்டர், 'ஏசி' உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. தவிர, புதிதாக அப்டேட் செய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வு புத்தங்கள் உட்பட 7,000 புத்தங்களை, எம்.எல்.ஏ., வாங்கி தர உள்ளார்.

அனைத்து பணிளும் முடியும் பட்சத்தில், ஓரிரு வாரத்தில் கத்திவாக்கம் டிஜிட்டல் நுாலகம் பயன்பாட்டிற்கு வரும் என, கூறப்படுகிறது.

Advertisement