மணலி விரைவு சாலை மைய தடுப்பில் இடைவெளி விட வலுக்குது கோரிக்கை

திருவொற்றியூர்:திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் மேம்பால பகுதியில் முல்லை நகர் சந்திப்பு துவங்கி, மணலி எம்.எப்.எல்., சந்திப்பு வரையிலான, 7 கி.மீ., துார மணலி விரைவு சாலையை, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் கன்டெய்னர், டிரைலர் மற்றும் கனரக வாகனங்களுக்கு இச்சாலை மிக பிரதானம். இச்சாலையை பராமரிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சத்தியமூர்த்தி நகர் - பகிங்ஹாம் கால்வாய் சிறுபாலம் துவங்கி, மதுரா நகர் வரை 3 அடி உயரத்தில், சாலை மைய தடுப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, மணலி விரைவு சாலையில், பாதசாரிகள் சாலையை கடக்கும் விதமாக, முல்லை நகர், முருகப்பா நகர், ஜோதி நகர், டி.கே.எஸ். நகர், சத்தியமூர்த்தி நகர் ஆகிய, ஐந்து இடங்களில் இடைவெளி இருந்தது.

தற்போது, முல்லை நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இடைவெளி உள்ளது. மற்ற மூன்று இடங்களிலும் வழி அடைக்கப்பட் டுள்ளது. இதனால், மக்கள் பல கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியுள்ளது.

இந்த மூன்று இடங்களில் மக்கள் நடமாட்டம், பேருந்து நிறுத்தங்கள் இருப்பதால், சாலையை கடக்க இடைவெளி வேண்டும் என, 4வது வார்டு மார்க்.கம்யூ., கவுன்சிலர் ஜெயராமன், பல்வேறு கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், எந்த நடவடிக்கையும் இல்லை.

இது ஒருபுறமிருக்க புதிதாக அமைக்கப்படும் மைய தடுப்பின் விபரம் குறித்து தெரியப்படுத்தவில்லை. எனவே, இடைவெளி விட்டு மைய தடுப்பு அமைக்க வேண்டும் என, மார்க்.கம்யூ., கட்சியினர் சார்பில் மணலி விரைவு சாலையில், ஆங்காங்கே கோரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, மணலி விரைவு சாலையில் இரு பக்கமும் பேருந்து நிறுத்தங்கள் உள்ள ஐந்து இடங்களிலும், சாலையை கடக்க ஏதுவாக இடைவெளி வேண்டும். ஜோதி நகர் நான்கு முனை சந்திப்பில், ரவுண்டானா அமைக்க வேண்டும். இல்லாவிடில், வீதியில் இறங்கி போராடக் கூடும் என, பகுதிவாசிகளும் தெரிவித்துள்ளனர்.

Advertisement