ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வருகிறது வண்ண மீன் வர்த்தக மையம்

சென்னை:'வில்லிவாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின் கட்டட பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

வில்லிவாக்கத்தில் உள்ள சிவசக்தி நகரில், சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்தக மையம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

உலக தரத்தில், இந்த வர்த்தக மையம் அமைய வேண்டும் என்ற நோக்கில், 3.93 ஏக்கர் பரப்பளவில், 53 கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில், இரண்டு தளங்களாக கட்டப்படுகின்றன. தரை தளத்தில் 64 கடைகள், முதல் தளத்தில் 70 கடைகள், இரண்டாம் தளத்தில் 54 கடைகள் மற்றும் மீன்வள அமைப்புகள் உட்பட மொத்தம் 188 கடைகள் அமைக்கப்படுகின்றன.

வண்ண மீன் உற்பத்தியைப் பெருக்கவும், வண்ண மீன்களை எளிதாக சந்தைப்படுத்தவும், மீன் வளர்ப்போர் மற்றும் மீன் சார்ந்த தொழில் செய்வோர் பயன் பெறும் வகையிலும் இம்மையம் அமைக்கப்படுகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். தற்போது, 50 சதவீத கட்டட பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆறு மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement