பாதுகாப்பின்றி வடிகால்வாய் பணி கோயம்பேடில் உயிர்பலி அபாயம்

கோயம்பேடு:கோயம்பேடு சந்தை வளாகத்தில், மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, வடிகால்வாயை பணிகள் நடக்கின்றன. அந்த வகையில், கோயம்பேடு சந்தை - பி சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால்வாயை உடைத்து, 17 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக வடிகால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.

அதேபோல, மலர் மற்றும் பழ சந்தையில் தேங்கும் மழைநீரை, சந்தை - ஏ சாலையில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைத்து, காளியம்மன் கோவில் தெரு வழியாக 100 அடி சாலைக்கு எடுத்து சென்று, அங்கிருந்து கூவம் ஆற்றில் வெளியேற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த மழைநீர் வடிகால் பணி சந்தை - ஏ சாலையில் மந்தமாக நடந்து வருகிறது. அத்துடன், மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் திறந்த நிலையில் உள்ளது.

அந்த பள்ளங்களில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது.

எனவே, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மழைநீர் வடிகால் பணிகளை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement