பெண் போலீசிடம் தகராறு ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு

திருத்தணி:திருத்தணி போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் லீலாவதி, 37. இவர், நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவில் படாசெட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தீன்பாய், 45, என்பவர், ஆட்டோவில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு மலைக்கோவிலுக்கு செல்ல முயன்றார்.

அப்போது, மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகளவில் பக்தர்கள் நடந்து செல்வதால், ஆட்டோ மலைக்கோவிலுக்கு விட முடியாது என, லீலாவதி கூறியுள்ளார்.

இதனால், பெண் காவலருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் பெண் தலைமை காவலர், ஆட்டோ ஓட்டுநர் தீன்பாயை அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் தீன்பாய்க்கு ஆதரவாக, 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின், டி.எஸ்.பி., கந்தனிடம், பெண் தலைமை காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்தனர். மனுவை பெற்ற டி.எஸ்.பி., 'நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதை தொடர்ந்து, பெண் தலைமை காவலர், 'ஆட்டோ ஓட்டுநர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியும், பணி செய்யவிடாமல் தடுத்ததாக' திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement