அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில், ஆந்திர மாநில மலைப்பகுதியை ஒட்டி, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பாலாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது.

போதுமான பேருந்து வசதி இல்லாத இந்த பகுதியை சேர்ந்தவர்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக, அம்மையார்குப்பம் அல்லது சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது.

பகுதிவாசிகளின் நீண்டகால கோரிக்கையின் படி, ஆறு ஆண்டுகளுக்கு முன் பாலாபுரத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டது. இதனால், பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உள்ளூரில் மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகளை நடவு செய்தனர். அவற்றை பாதுகாக்க, மூங்கில் வேலியும் அமைத்தனர்.

தற்போது மரக்கன்றுகள் நன்கு வளர துவங்கியுள்ள நிலையில், மூங்கில் வேலி சிதைந்து கிடக்கிறது. சுகாதார மையத்தின் பாதுகாப்பு கருதி, நிரந்தர சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement