விவசாயி மீது கதிர் அறுக்கும் இயந்திரம் ஏறியதில் உயிரிழப்பு

குளித்தலை: குளித்தலை அருகே, வயலில் நெல் அறுவடையின் போது எதிர்பாராத விதமாக விவசாயி மீது இயந்திரம் ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாதிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி, 65; விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று முன்தினம் இயந்திரம் மூலம் அறுவடை பணியை தொடங்கினார்.


வயலில், நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெற்பயிர்களை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது, வயலில் முனியாண்டி நின்றுகொண்டிருந்தார். அவர் இருப்பது தெரியாமல், டிரைவர் அறுவடை இயந்திரத்தை அதிவேகமாக இயக்கியபோது, முனியாண்டி மீது மோதியது. இதில், கீழே விழுந்த முனியாண்டி மீது அறுவடை இயந்திரம் ஏறி இறங்கியதில், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தோகைமலை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகள் செந்தமிழ்செல்வி, 38, கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் கதிர் அறுக்கும் இயந்திர டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement