வெறுப்பு பேச்சு வழக்கில் தண்டனை உ.பி., - எம்.எல்.ஏ., தகுதி நீக்கம்

லக்னோ: வெறுப்பு பேச்சு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து, உத்தர பிரதேசத்தின் எம்.எல்.ஏ., அப்பாஸ் அன்சாரி நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில், கடந்த 2022ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், மவு சதார் தொகுதியில் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சார்பில் அப்பாஸ் அன்சாரி போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது, மவு நிர்வாக அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதை அடுத்து, அவர் மீது மிரட்டல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், அப்பாஸ் அன்சாரிக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதித்தது.

ஒரு எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,க்கு இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் பதவி பறிக்கப்பட வேண்டும் என அரசியல்சாசனத்தில் விதி உள்ளது. இதையடுத்து, இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்ற அப்பாஸ் அன்சாரி எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரின் மவு சதார் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாஸ் அன்சாரியின் தந்தையான முக்தார் அன்சாரி பிரபல ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவர், கடந்த 2024ல் உயிரிழந்தார்.

Advertisement