சாதனை திட்ட பிரசார பயணம்; ஈரோட்டில் துவக்க முதல்வர் முடிவு

சென்னை: அரசின் திட்டங்கள் தொடர்பான பிரசாரத்தை, ஈரோட்டில் இருந்து துவக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஐந்தாம் ஆண்டில் பயணித்து வருகிறது. அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில், மகளிர் உரிமைத்தொகை, பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு, பெண்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தி.மு.க., தரப்பு நம்புகிறது.
அதேபோல, நான் முதல்வன், மாணவ - மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை வைத்து, மகளிர் மற்றும் இளைஞர்கள் ஓட்டுகளை கைப்பற்ற, தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்களுக்கு லேப்டாப், விடுப்பட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட சலுகைகளும், அடுத்தடுத்து வழங்கப்பட உள்ளன.
சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அரசின் திட்டங்கள் தொடர்பான பிரசாரத்தை முன்னெடுக்கப் போவதாக, முதல்வர் ஸ்டாலின், அறிவித்துள்ளார். இந்த பிரசாரத்தை, மங்களகரமான மஞ்சள் விளையும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து துவக்க, அவர் திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, வேளாண்துறை வாயிலாக, வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் 11ம் தேதி துவக்கி வைக்க உள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
வழக்கமாக முதல்வர் ஸ்டாலின், மாவட்ட சுற்றுப்பயணம் செய்யும்போது, மக்களை சந்திக்கும் 'ரோடு ஷோ' நடத்துவது வழக்கம். இந்த முறை அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில், மக்களுடன் முதல்வர் கலந்துரையாடும் வகையில், முதல்வரின் பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் துவங்கி, மாநிலம் முழுதும் அடுத்தடுத்து பல மாவட்டங்களுக்கும் சென்று, அரசின் சாதனைகளை, மக்களிடம் முதல்வர் விளக்க உள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும்
-
பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
-
வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்
-
செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி
-
சென்ற இடமெல்லாம் ஆதரவு கிடைத்தது: சசி தரூர் மகிழ்ச்சி
-
வாடிக்கையாளர் பணத்தை திருடி பங்குச்சந்தையில் முதலீடு: ராஜஸ்தானில் பெண் அதிகாரி துணிகரம்
-
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்