விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி

சென்னை:விருதுநகரில் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அடுத்த அம்பனேரி கிராமத்தை சேர்ந்தவர் சோனைமுத்து. இவர் தனது மகள்கள் மதுமிதா,15, சுஷ்மிதா,13, அஜிதா,10 ஆகியோருடன், கடந்த 1ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றார். மேலக்கண்டமங்கலம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில், சோனைமுத்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த குழந்தைகள், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை அறிந்த முதல்வர், விபத்தில் இறந்த சோனைமுத்து குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய், பலத்த காயமடைந்த, மதுமிதாவிற்கு ஒரு லட்சம் ரூபாய், லேசான காயம் அடைந்த, மற்ற இரு குழந்தைகளுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement