அதிகாலையில் பணிக்கு வரும் துாய்மை பணியாளர்களுக்கு பஸ் வசதி வேண்டும்! வருகை கெடுபிடி தவிர்க்க மனு

கோவை; மாநகரை சுத்தமாக பராமரிக்க உதவும், துாய்மை பணியாளர்களுக்கு தற்போது வீடுகள் தொலைதுாரங்களில் மாற்றப்பட்டு விட்டன. இதனால் அதிகாலையில் பணிக்கு குறித்த நேரத்தில் வர சிரமம் உள்ளதால், கொரோனா காலத்தைப் போல், தங்களுக்கென அதிகாலையில் பஸ் இயக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட நிரந்தரம், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தற்காலிக துாய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி வந்தனர்.

இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை மேலாண்மை பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தினக்கூலி உயர்வு கோரி கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படி அதிருப்தியில் இருக்கும் பணியாளர்களுக்கு, புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, வருகை பதிவு உள்ளிட்ட விஷயங்களில் கெடுபிடிகள் விதிப்பதாக, தற்காலிக துாய்மை பணியாளர் குமுறுகின்றனர்.

மாற்று ஏற்பாடு தேவை!



பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்க துாய்மை பணியாளர் பிரிவு பொதுச்செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:

துாய்மை பணியாளர்கள், 12 ஆண்டுகளாக வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு பணிக்கு செல்கின்றனர். தற்போது, புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் 'பயோமெட்ரிக்' இயந்திரம் வாயிலாக, பணியாளர் வருகையை பதிவு செய்வதாக கூறி வருகின்றனர்.

மாநகர் மத்தியில் குடியிருந்த துாய்மை பணியாளர்கள், வெள்ளலுார், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி போன்ற தொலைதுார இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். ஒப்பந்ததாரர்கள் நிர்ணயிக்கும் கால நேரத்தில் வருகை பதிவினை பதிவு செய்ய அதிகாலை, 4:00 மணி, 5:00 மணி என, தொலைவுக்கு ஏற்ப, முன்கூட்டியே புறப்பட வேண்டும்.

தொலைவிலிருந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு, கொரோனா காலம் போல், பஸ் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அலைச்சலை தவிர்க்க, துாய்மை பணியாளர் தங்கியிருக்கும் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள வார்டுகளில், பணி ஒதுக்க வேண்டும்.

அவர்களை கட்டாயப்படுத்தி மாற்று வார்டுகளுக்கு மாற்றம் செய்யக்கூடாது. குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு, சில சமயங்களில் கைரேகை விழாமல் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநகராட்சி கமிஷனரிடம் முறையிட்டுள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

மாநகர் மத்தியில் குடியிருந்த துாய்மை பணியாளர்கள், வெள்ளலுார், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி போன்ற தொலைதுார இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். ஒப்பந்ததாரர்கள் நிர்ணயிக்கும் கால நேரத்தில் வருகை பதிவினை பதிவு செய்ய அதிகாலை, 4:00 மணி, 5:00 மணி என, தொலைவுக்கு ஏற்ப, முன்கூட்டியே புறப்பட வேண்டும்.

Advertisement