கேரளாவில் பருவமழை தீவிரம்; ரப்பர் பால் உற்பத்தியில் சுணக்கம்

திருப்பூர்; பருவ மழையால் கேரளாவில், ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், 'எலாஸ்டிக்' உற்பத்தியாளர், ரப்பர் இறக்குமதி செய்ய களமிறங்கியுள்ளனர்.

மதிப்பு கூட்டப்பட்ட பின்னலாடை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது 'எலாஸ்டிக்'. குறிப்பாக, உள்ளாடை உற்பத்தியில், 'எலாஸ்டிக்' பயன்பாடு அத்தியாவசியமானது. ரப்பர் பாலில், ரசாயனம் சேர்த்து, ரப்பர் நுாலிழை உற்பத்தி செய்யப்படுகிறது.

கேரளாவில் இரண்டு நிறுவனமும், அஸாமில் ஒரு நிறுவனம் என, நம் நாட்டில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே, நுாலிழை 'டேப்' போன்ற ரப்பர் இழையை சப்ளை செய்கின்றன. மழை பெய்யும் காலங்களில், மரத்தில் இருந்து ரப்பர் பால் எடுப்பது பாதிக்கப்படுகிறது. இதனால், ரப்பர் தயாரிப்பும் பாதிக்கப்பட்டு, எலாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தற்போது கேரளா மற்றும் வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால், ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில், மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், மலேசியா மற்றும் தாய்லாந்தில் இருந்து, ரப்பர் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறுகையில், ''பின்னலாடை உற்பத்திக்கு தேவையான எலாஸ்டிக் தயாரிக்க, ரப்பர் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. மழைக் காலங்களில் ரப்பர் பால் எடுப்பது குறைந்து, ரப்பருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருப்பூருக்கு மட்டும், மாதம் 800 டன் அளவுள்ள ரப்பர் தேவைப்படுகிறது. சில மாதங்களில் மட்டும், 1,200 டன் வரை தேவைப்படும். தட்டுப்பாட்டை சமாளிக்க, மலேஷியா, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement