விமானங்களின் எண்ணிக்கை குறைப்பு; பயணிகள், தொழில் அமைப்பினர் அதிர்ச்சி

கோவை; விமானங்கள் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதால், கோவை பயணிகள், தொழில் அமைப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும், பல்வேறு காரணங்களுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகம். விமான நிலையத்தில் இடநெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள், இன்னும் ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், உடனடியாக விமான நிலையத்தில் மாற்றங்களை செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

கோவை விமான நிலையத்தில், பயணிகள் போக்குவரத்தில் நல்ல வளர்ச்சி இருந்தபோதிலும், ஒரு சில விமான நிறுவனங்கள், விமானங்களை ரத்து செய்துள்ளன.

இண்டிகோ நிறுவனம், ஜூலை - செப்., மாதங்களில், சென்னை - கோவை, ஹைதராபாத் - கோவை விமானங்கள், ஜூலை - அக்., மாதங்களில், மும்பை - கோவை விமானம் என, மூன்று உள்நாட்டு விமானங்களையும், அபுதாபி - கோவை இடையேயான ஒரு சர்வதேச விமானத்தையும் ரத்து செய்துள்ளது.

ஜூலை, 1 முதல் சென்னை - கோவை இடையேயான விமானத்தை, ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.

கோவை - சென்னை இடையே தினமும் இரு விமானங்கள் குறையும் என்பதால், விமானக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை தொழில் நிறுவனங்கள் கோரி வரும் நிலையில், விமானங்கள் குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 'கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இடம் இருப்பதில்லை.

அப்படியிருக்கையில் விமான இயக்க குறைப்பு, நடவடிக்கை பயணிகளுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். கட்டணம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விமானங்களை குறைக்காமல் தொடர்ந்து இயக்க வேண்டும்' என்றார்.

Advertisement