பிரதமர் மோடி பேனர் அகற்றம் 'யார் அந்த சார்?' பா.ஜ., கேள்வி; திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பிரதமர் மோடி படம் பொறித்த விழிப்புணர்வு பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 'யார் அந்த சார்' என, கோஷமிட்டனர்.

மத்திய வேளாண் அமைச்சகம், 'விக் ஷித் க்ரிஷி சங்கல்ப் அபியான்' என்கிற பெயரில், வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கியுள்ளது. நாடு முழுவதும் மே, 29ல் துவங்கிய பிரசார நிகழ்ச்சி, வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து அனைத்து விவசாயிகளும் அறிந்து கொள்ள, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பிரதமர் மோடி படம் பொறிக்கப்பட்ட பேனர் ஒட்டப்பட்டிருந்தது.

கடந்த மே, 31ம் தேதி, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்றிருந்தனர்.

கலெக்டர், டி.ஆர்.ஓ., வேளாண் இணை இயக்குனர் உட்பட அதிகாரிகள் இருக்கும்போதே, பிரதமர் படம் பொறித்த, பிரசார பேனரை, அலுவலர்கள் சிலர் அகற்றினர்.

இதனை கண்டித்து, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையிலான கட்சியினர், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். ரோட்டிலேயே மடக்கிய போலீசார், நுழைவாயிலை கூட நெருங்கவிடாமல் தடுத்தனர். இதனால், போலீசார் - பா.ஜ., வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சமாளிக்க முடியாமல் திணறிய போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்படுவதாக அறிவித்தனர். அப்போது, 'பிரதமர் மோடி படம் பொறித்த பேனரை, எந்த சார்? எந்த மேடம் அகற்றச்சொன்னது' என கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து, போலீசார், மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்பட முக்கிய நிர்வாகிகளை, டி.ஆர்.ஓ., கார்த்திகேயனிடம் அழைத்துச்சென்றனர்.

பேச்சுவார்த்தையில் டி.ஆர்.ஓ.,வின் கருத்துக்களை ஏற்காத பா.ஜ.,வினர், தாங்கள் எடுத்துவந்த பிரதமர் மோடி படம் பொறித்த விழிப்புணர்வு பிரசார பேனர்களை, அவரிடம் கொடுத்து, 'கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டி வையுங்கள்' என்று கூறிவிட்டு புறப்பட்டனர்.

Advertisement