ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை அதிகம் வைக்க உத்தரவு; ரூ.500 புழக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டம்

37

புதுடில்லி: ரூ.500 புழக்கத்தை குறைக்க, ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை அதிகம் வைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


@1brநாட்டில் தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றுவிட்டது. மிகக்குறைந்த அளவிலான பணம் மட்டுமே வங்கிக்கு திரும்ப வராமல் உள்ளது. அந்த வகையில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அதிகபட்ச மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ரூ. 500 தான்.


இந்நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.,களிலும் 75 சதவீதம் வரை 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்கவும், அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 90% வரை 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்கவும் ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கி உள்ளது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் தேவையான அளவு புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், 500 ரூபாய் நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கத்துடன் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்த மதிப்புள்ள ரூ.100, ரூ.200 நோட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவே, ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை அதிகம் வைக்கும் உத்தரவுகளின் நோக்கமாகும்.

ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். தொடர்ந்து பயன்பாட்டிலும் இருக்கும். அதைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை கூறியது தானே என்றும் இப்போது கூட 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவின் பேட்டியை தொடர்ந்து, பணம் மதிப்பிழப்பு தொடர்பாக பல விதமான உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement