அரசு இரிடியம் விற்பதாக மர்ம கும்பல் மோசடி

2



சென்னை: 'ரிசர்வ் வங்கி வாயிலாக, மத்திய அரசு இரிடியம் விற்கிறது. இதில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் எனக்கூறி, மர்ம கும்பல், 4.50 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது' என, சி.பி.சி.ஐ.டி., தெரிவித்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்ட அறிக்கை:



கடந்த ஆண்டு மே மாதம், மத்திய அரசு, ரிசர்வ் வங்கி வாயிலாக இரிடியம் விற்பதாகக் கூறி, மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என, ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் கென்னடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



இப்புகார் மனு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த மார்ச்சில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நித்யானந்தம், 44; சந்திரா, 36, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


அதன் பின்னர், தர்மபுரி, சேலம் மாவட்டத்தை மூன்று பேர், தெலுங்கானாவின், கிஷாேர்குமார், 45 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் பல இடங்களில், 20 பேரிடம், 4.50 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.


முதலீட்டாளர்களை நம்ப வைக்க, டில்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல், சிலரை நடிக்க சொல்லி நம்ப வைத்துள்ளனர். போலி ஆவணங்கள் வாயிலாக, வங்கி கணக்கு துவங்கி, இதில் தான் இரிடியம் தொடர்பாக, ரிசர்வ் வங்கி பண வரவு வைக்கிறது எனக் கூறி மோசடி செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement