துாய்மை பணிகளில் ஆண்டுக்கு டெண்டர் தொகை 10% உயர்வு

திருப்பூர் : நகராட்சி, மாநகராட்சியில் துாய்மைப்பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கான டெண்டர் தொகையில், ஆண்டுக்கு, 10 சதவீதம் உயர்த்தி வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், 'துாய்மைப் பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயித்த குறைந்தபட்சக்கூலி கூட வழங்கப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர் மாவட்ட உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் பூண்டி நகராட்சி பகுதி தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது:


ஆண்டுதோறும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில், தனியார் நிறுவனத்துக்கான குத்தகை உரிமத்தை நீட்டித்து வழங்கும் போது, ஒரு டன் குப்பை அள்ள, ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து, 10 சதவீதம் உயர்த்தி வழங்கும் வகையில் ஒப்பந்த விதி வரையறுக்கப்பட்டுள்ளது.



அதேநேரம், ஒப்பந்த நிறுவனத்தினரிடம் பணிபுரியும், துாய்மைப் பணியாளர்களுக்கு, தினமும், 760 ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்.


அதில், பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., தொகை பிடித்தம் செய்ய வேண்டும் என்பது, அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்.


ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தினக்கூலியாக, 500 ரூபாய்க்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. பி.எப், மற்றும் இ.எஸ்.ஐ., தொகை கூட சரிவர பிடித்தம் செய்யப்படுவதில்லை.


இதனால் தொழிலாளர்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement