தொகுதி வாரியாக சந்திப்பு; கட்சியினருக்கு முதல்வர் கடிதம்

சென்னை : சட்டசபை தொகுதி வாரியாக, தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை நடத்த இருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கட்சியினருக்கு நேற்று அவர் எழுதிய கடிதம்:-

'ஓரணியில் தமிழகம்' என்ற புதிய உறுப்பினர் சேர்ப்பு திட்டத்தை, தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று, வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால், ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும்.

அவர்கள், தி.மு.க., அரசு தொடர வேண்டும் என, விரும்புவர். அப்படி விரும்புகிறவர்களை உறுப்பினர்களாக்கி, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குறைந்தபட்சம், 30 சதவீதம் பேராவது கட்சி உறுப்பினர்கள், என்ற இலக்குடன், உறுப்பினர் சேர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

உங்களை நம்பித்தான், 'ஓரணியில் தமிழகம்' என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.

என் நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்களின் நலன், உங்கள் செயல்பாடு, கட்சியின் முன்னேற்றம் அறிய, சட்டசபை தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகள் சந்திப்பை துவங்க இருக்கிறேன்.

தொடர்ச்சியான பயணங்களில், உங்கள் ஊருக்கு வரும்போது, தொண்டர்களின் முகம் கண்டு மகிழ்வேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement