கோவைக்கு 'புல்லட்' பைக்குகளில் வந்த பயங்கரவாத எதிர்ப்பு பேரணி

கோவை : 'துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள்' என்ற முழக்கத்துடன், பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புணர்வு பைக் பேரணி, நேற்று கோவை வந்தது.

பஹல்காமில், ஏப்., 22ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை கண்டித்து, சலோ எல்.ஓ.சி., என்ற அமைப்பு, சார்பில், அமைதி, ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், 'புல்லட்' பைக் பேரணி துவங்கப்பட்டுள்ளது.

கேரளாவின் காலடியில் இருந்து துவங்கி, ஜம்மு - காஷ்மீரின் எல்லை அருகே உள்ள டீட்வாலில் உள்ள சாரதா யாத்ரா சேத்ராவில், பேரணி நிறைவடைய உள்ளது. பேரணி சுமார், 3,600 கி.மீ., துாரத்தைக் கடக்க உள்ளது.

நேற்று முன்தினம், கேரளாவில் துவங்கிய பேரணி, நேற்று அதிகாலை கோவை வந்தது. இப்பேரணி, ஜூன், 12ம் தேதி முடிவடைகிறது.

இதில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'துப்பாக்கிகளுக்கு எதிரான தோட்டாக்கள் என்ற முழக்கத்துடன், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்த பைக் பேரணி நடக்கிறது. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவும், அப்பகுதியில் அமைதி திரும்ப வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும், இப்பேரணி நடத்தப்படுகிறது' என்றனர்.

Advertisement