இண்டி கூட்டணியின் பஹல்காம் பார்லி. சிறப்புக் கூட்ட கோரிக்கை: மத்திய அரசு புதிய முடிவு

2

புதுடில்லி: பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.



26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களையும் அழித்தது. இந்த பதிலடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


பாகிஸ்தானில் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையை உலக நாடுகளுக்கு தெரிவித்து நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பார்லி. எம்.பி.,க்கள் குழு உலக நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கியது. அதே சமயத்தில், எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்டி பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.


இந் நிலையில் இண்டி கூட்டணியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஏற்கனவே ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது.


எனவே தற்போதைய நிலையில், சிறப்புக் கூட்டத்தொடர் என்பது அவசியமற்றது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும், பார்லிமென்டில் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும், அடுத்து வரக்கூடிய பார்லிமென்ட் தொடரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றி உரிய விளக்கம் அளிப்பார் என்று மத்திய அரசு தகவல்கள் கூறுகின்றன.

Advertisement