என் மகனை அடித்து கொன்றுவிட்டனர் கமிஷனர் அலுவலகத்தில் தாய் புகார்

சென்னை :'என் மகனை மது குடிக்கச் சொல்லி அடித்து கொன்றுவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தாய் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, ஓட்டேரி ஜமாலியா பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி, 45. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:

என் கணவர் கூலி வேலை செய்கிறார். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். எங்கள் மகன் ராகுல், 21, டி.பி., சத்திரத்தில், ராஜ்குமார் என்பவர் நடத்தி வரும் மாவு மில்லில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். மில்லுக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்து தரும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

கடந்த மாதம், 25ம் தேதி, என் மகனுக்குத் தெரிந்த குணா என்பவர், என் மொபைல் போனுக்கு அழைத்தார். 'உங்கள் மகன், மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டான். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான்' என, தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

நாங்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, எங்கள் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். திடீரென, 27 ம் தேதி காலை, 8:00 மணியளவில் கண் விழித்தார். அப்போது என்ன நடந்தது என, கேட்டேன்.

நானும், குணா, விக்கி, நித்தீஸ் மற்றும் என்னுடன் வேலை பார்க்கும் சுடலைமுத்து ஆகியோர், அண்ணா நகரில் உள்ள பாரில் மது குடித்தோம். அங்கு பிரச்னையாகிவிட்டது. அண்ணா நகர் போலீசார் எங்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

எங்கள் முதலாளி ராஜ்குமார் அங்கு வந்து, போலீசாருடன் பேசி வெளியே அழைத்து வந்தார். குணா உள்ளிட்டோர் என்னை அண்ணா நகரில் உள்ள, ராஜ்குமார் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மீண்டும் மது குடிக்க வைத்தனர்.

அப்போது, குணா, விக்கி ஆகியோர் என்னை அடித்து, இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர் என, கூறினார்.

என் மகனிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு, அடித்து கொன்றுவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement